Wednesday, December 9

வயிரவன் சேர்வைகாரர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.














முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.

பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள்.கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் “ராமலிங்க விலாசம்’ என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.

அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .

வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.

பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.

நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.

நன்றி வினோத் அகமுடையார் 

3 comments:

  1. மிகவும் அருமை. நல்ல தகவல் தந்த வினாத் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. நான் மேற்கூறிய மங்களேஸ்வர குருக்கள் முதல் மகன் வழி பேரன்.முருகபெருமானையும் என் பாட்டனாரையும் வணங்குகிறேன்

    ReplyDelete
  3. ஐயா சாத்தப்ப சேர்வை அவர்களையும் வணங்குகிறேன்

    ReplyDelete

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...