Sunday, August 9

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்



பெரிய பாண்டியருக்கு இராக்காத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள்

ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள் 

இருந்தனர்.இவர்கள் அனைவரின் சிலைகளும் நரிக்குடி சத்திரத்தின் 

பின்புறமுள்ள வளாகத்தில் சிறு சிறு மண்டபங்களில் உள்ளன.


முதல் மனைவி இராக்காத்தாள் வாரிசுகள் :-


இவருக்கு குடைக்காதுடையார், முத்துச்சாமி, உடையணன், முள்ளிக்குட்டி 

சாமி ஆகிய 4 மகன்கள். குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் 

கொல்லப்பட்டார். முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு 

முன்னரே இயற்கை மரணம் அடைந்தார். இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் 

மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் 

அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர்.

இவ்வூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் 'பெரிய 

மருது' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் 

கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன. இராக்காத்தாள் அவர்களின் 

மூன்றாவது மகன் உடையணனும், நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 

1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் 

தூக்கிலிடப்பட்டனர்.


இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் வாரிசுகள் :-



கருப்பாயி ஆத்தாளுக்கு கறுத்த தம்பி என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி 

ஆத்தாள், மருதாத்தாள் என்ற 3 குழந்தைகள். கருப்பாயி ஆத்தாள் முத்தூர் 

அரண்மனையில் வசித்து வந்தார். சிவகங்கை காளையார்கோயில் 

சாலையில் கொல்லங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே 

ஒருமைல் தூரம் நடந்து சென்றால் முத்தூரை அடையலாம். முத்துப்போன்ற 

நெல்மணிகள் விளைவிற்கு பஞ்சமில்லாத ஊர் இதுவென்பதால் இவ்வூருக்கு 

இப்பெயர் வந்திருக்கலாம் என்று வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது 

இராணுவ நினைவுகள் புத்தகத்தின் VOL 1 பக்கம் 125 ல் எழுதியுள்ளார்.

முத்தூர் அரண்மனை ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. 

அரண்மனை அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பூசை 

அறைதவிர பிறபகுதிகள் இடிந்து போய்விட்டதால் அந்த இடத்தில் ஊராட்சி 

ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாய்சேய் நலவிடுதி, சத்துணவுமையம் முதலியன 

கட்டப்பட்டுள்ளன. அக்கட்டட வளாகங்களிடையே அரண்மனையின் பழைய 

செங்கல் தளவரிசையை காணமுடிகிறது. பரமக்குடி போர் முடிந்து திரும்பிய 

மருதிருவரும் படையினரும் சிறுவயல் சென்றடையும் முன் முத்தூர் 

அரண்மனையில் ஒரு நாள் தங்கி சென்றதாக வரலாறு உள்ளது. அத்தனை 

பேர் தங்கி செல்லும் அளவுக்கு முத்தூர் அரண்மனை அவ்வளவு பெரியதாய் 

இருந்திருக்கிறது.  கருப்பாயி ஆத்தாளின் ஒரே மகனான 

கறுத்தப்பாண்டியனை 1801 ல் விடுதலைப்போரில் பங்கேற்றதற்காக 

ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.


மூன்றாவது மனைவி பொன்னாத்தாளுக்கு பிள்ளைகள் இல்லை.



பொன்னாத்தாள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த நரிக்குடி 

முக்குலத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஆவார்.


நான்காவது மனைவி ஆனந்தாயி ஆத்தாள்:



கொல்லங்குடியில் தனக்கென்று கட்டப்பட்ட மாளிகையில் வசித்து வந்தார். 

இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்து போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.


ஐந்தாவது மனைவி மீனாட்சி ஆத்தாள் வாரிசுகள்:


மீனாட்சி ஆத்தாளுக்கு கவண்டன் கோட்டை துரை, தங்கம் என்ற 

பெரியதங்கம் என இரு பிள்ளைகள். மீனாட்சி ஆத்தாள் தனது தந்தையின் 

அரண்மனை உள்ள கவண்டன் கோட்டையில் தான் தன் மகள் தங்கத்துடன் 

தங்கி இருந்தார். 1794 ல் பரமக்குடி போரில் கவண்டன்கோட்டை துரை 

அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது மருதிருவர் 

புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் கணவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் 

மகள் பெரிய தங்கத்துடன் தந்தையின் ஊரைவிட்டு கிளம்பிய 

மீனாட்சியாத்தாள் நரிக்குடியை அடுத்த வேலங்குடியில் குடியேறிவிட்டார்.


பெரியதங்கத்திற்கு இருபுதல்வர்களும் ஆதி வீரலட்சுமி என்ற 

சின்னதங்கமும் பிறந்தனர். ஆதிவீரலட்சுமி இந்த வேலங்குடிக்கு 3 கி.மீ 

தூரத்தில் உள்ள சீனிக்காரனேந்தலில் குடியேறினார். இவரது வழியினர் 

வேலங்குடி மற்றும் சீனிக்காரனேந்தலில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.

படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள 

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி 

ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...