Sunday, August 9

வீரத்தை வளர்க்க வீர சங்கம் நிறுவிய மருது பாண்டியர்கள்

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வடக்கே சமஸ்தானங்கள் போர்க்கோலம் பூணும் முன்பே தமிழ் மண்ணில் ஒரு வீரியமான மக்கள் விடுதலை இயக்கம் நடைபெற்றது.மருது சகோதரர்களால்             வடிவமைக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் தங்களை வீர சங்கத்தினர் என அழைத்துக் கொண்டனர்.

1772ல் சிவகங்கை ராஜா முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதற்கு பிறகு ஊராளிகள்(ஊர் தலைவர்கள்) மூலம் சங்கத்துக்கு ஆள் சேர்த்தனர். சங்கத்தை ஒருங்கிணைக்க திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பெரிய மருது பயணம் மேற்கொண்டார். கேரளாவில் உள்ள மடப்புரிக்கு சென்ற மருது, அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு நூற்றுக்கணக்கான மலபார் வீரர்களுடன் எழுச்சிமிக்க நடைபயணம் மேற்கொண்டார். தோளுயர்த்தி,நெஞ்சை நிமிர்த்திவந்த அந்த படைக்கு உணவு வழங்குவதை தடுக்க ஆங்கிலேயர் சாலைகளை மூடினர். ஆனால், கடல் வழியாக தொண்டி துறைமுகத்துக்கு உணவு வரவழைக்கப்பட்டது. சங்கத்தின் ஆயுத தேவைக்காக மேலூரிலும் தாரமங்கலத்திலும் இரு துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.இவ்வாறு தீவிரமாகவும் ரகசியமாகவும் வீரசங்கம் செயல்பட்டது.திப்பு மீது போர் தொடுக்க 5.3.1799ல் ஆங்கிலேய படைகள் மைசூருக்கு சென்ற நிலையில் தமிழக ராணுவ கிடங்குகளில் இருந்து துப்பாக்கி,வெடிமருந்து,உணவுப்பொருட்களை வீர சங்கத்தினர் கைப்பற்றினர். முத்துக்கருப்பன்,சிங்கம் செட்டி போன்றோர் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர்,கொக்குளம், சிக்கல் ராணுவ கிடங்குகளை தாக்கினர். மேஜர் பானர்மேன் தலைமையிலான படை பாலமநேரியில் சிங்கம்செட்டியை பிடித்து தூக்கிலிட்டது. அவரது தலையை ஈட்டியில் குத்தி முச்சந்தியில் நட்டனர்.நெல்லை வீர சங்கத்துக்கு தலைமை வகித்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1799 ஜூனில் சாப்டூர்,ஏழாயிரம்பண்ணை, காடல்குடி,குளத்தூர் பகுதி தலைவர்களை சங்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். செவத்தையா,வீரபாண்டிய நாயக்கர்,வீரபத்திரபிள்ளையை இளவரசநல்லூருக்கு அனுப்பி அங்குள்ள கள்ளர்கள் ஆதரவm பெற்றார்.     1.6.1799ல் பாலமநேரியில் நடந்த சண்டையில் மருது சகோதரர்களுடன் வீர சங்கத்தினரும் சமராடினர்.இதற்கிடையே புரட்சிப்படையை சேர்ந்த 42 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.இதில் 8 பேர் தாராபுரத்திலும், 7பேர் சதியமங்கலத்திலும், 6 பேர் கோயமுத்தூரிலும் மக்கள் நடுவே தூக்கில் இடப்பட்டனர். 16.10.1799ல் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட பின்
சின்ன மருது நெல்லை பகுதி வீரசங்கத்துக்கு தலைமை பொறுப்பேற்றார். கட்டப்பொம்மன் தம்பி குமாரசாமி செவத்தையா உட்பட 17 வீரசங்கத்தினர் நெல்லையில் சிறைப்படுத்தப்பட்ட போது 200 வீரர்கள் முருக பக்தர் வேடம் புனைந்தும், வாழை இலை, விறகு விற்பவர்போல் நடித்தும் அவர்களை சிறைமீட்டனர்.

சின்ன மருது 1801ல் தூக்கிலிடப்பட்ட பின்னரும் வீர சங்கத்தின் தொண்டு தொடர்ந்தது. ஊர்தோறும் கத்தி சண்டை, கம்பு சண்டை, மல் யுத்தம் என பயிற்சிகள் களம்கட்டின.மதுரை, திண்டுக்கல், குமரி பகுதிகளை விட நெல்லை பகுதியில் ஏராளமானோர் சங்கத்தில் இணைந்தனர். குறிப்பாக நாங்குநேரி மறுகால் குறிச்சியில் ஊரே ஒட்டுமொத்தமாக சங்கத்தில் இணைந்தது. எங்கும் எழுச்சியும் கிளர்ச்சியும் நிகழ்ந்தவண்ணமிருந்தன. இதையடுத்து அப்போதைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் மல் யுத்தம்,கொரில்லா பயிற்சிகளை நடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும்என அரசாணை கொண்டுவந்தார். கிழக்கிந்தி கம்பெனி படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். பலரும் தூக்கிலிடப்பட்டனர்.
ஆனாலும் விடுதலை உணர்வு அடங்கவில்லை இறுதியாக வீர சங்கத்தின் உறுப்பினர்கள், குடும்பத்தினர் 74 பேருக்கு தீவாந்தர தண்டனை விதித்தனர். இவர்களில் பெரிய மருதுவின் மகனான 15 வயது துரைச்சாமியும் அடக்கம். தென் தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த வீரசங்கம்,

இந்த தீவாந்தர தண்டனைக்கு பின்பு கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து இறுதியில் வீழ்ந்தது.வீழ்ந்தாலும் விருச்சமாக வளர்ந்து நிற்கின்றது மருதரசர்களின் புகழ்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...